டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் பண மோசடி... ரூ. 34 ஆயிரத்தைச் சுருட்டிய திருடன்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா இணையப் பண மோசடியில் சுமார் 34 ஆயிரம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது மகள் ஹர்ஷிதா தான் ஏற்கனவே பயன்படுத்திய பழைய சோபா ஒன்றை விற்பனை செய்ய OLX தளத்தில் விளம்பரம் அளித்துள்ளார். ஒருவர் பயன்படுத்திய பொருட்களை OLX தளத்தில் விற்பனை செய்ய முடியும்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சோபாவை வாங்க ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டுள்ளார். சோபாவிற்கான பணத்தை அளிக்க ஹர்ஷிதா தனது வங்கி தொடர்பான தகவல்களை அந்த நபருடன் பகிர்ந்துள்ளார்.
க்யூ ஆர் கோடு
ஹர்ஷிதாவின் நம்பிக்கையைப் பெறவும் அவர் அளித்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் சரியானது என்பதை உறுதி செய்யவும் ஆரம்பத்தில் சிறிய தொகையை ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிற்கு அந்த மர்ம நபர் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் ஹர்ஷிதாவிற்கு க்யூ ஆர் கோடு (QR code) ஒன்றை அந்த நபர் அனுப்பியுள்ளார். அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் பேசியபடி பணம் டிரான்ஸ்பர் ஆகிவிடும் என்று அந்த நபர் கூறியுள்ளார்.
ரூ.20,000 மோசடி
இதனால் ஹர்ஷிதாவும் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். உடனடியாக பணமும் டிரான்ஸ்பர் ஆகியுள்ளது. ஆனால், சோபா வாங்க முயன்றவரிடம் இருந்து பணம் வரவில்லை. மாறாக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.20,000 பணம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
மீண்டும் மோசடி
அப்போது ஹர்ஷிதாவிடம் மன்னிப்பு கேட்ட அந்த மர்ம நபர் தவறான க்யூ ஆர் கோடை தான் அனுப்பி விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், புதிதாக ஒரு க்யூ ஆர் கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுமாறு கேட்டுள்ளார். ஹர்ஷிதா அந்த க்யூ ஆர் கோடை மீண்டும் ஸ்கேன் செய்தபோது அவரது வங்கிக் கணக்கிலிருந்து மேலும் ரூ.14,000 பணம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் ஆனது.
போலீசில் புகார்
இதன் பின்னரே, தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ஹர்ஷிதா, இது குறித்து டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த டெல்லி காவல் துறை உயர் அதிகாரி, இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினர்.