இந்திராகாந்தி மாதிரி கொல்லப்படலாம்.. நான் சாக வேண்டுமென 'பிரதமர்' விரும்புகிறார்.. கெஜ்ரிவால் பகீர்
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாணியில் பாதுகாப்பு அதிகாரிகளால் தான் கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.
டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார். அவர் பதவி ஏற்றது முதலே மத்தியில் இருக்கும் மோடி அரசு , ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் தடுப்பதாகவும், தங்களது அமைச்சர்களையும்,தன்னையும் குறிவைத்து பணி செய்யவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப்பை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி நான் சாகவேண்டும் என விரும்புகிறார். இதனால் எனக்கு பாதுகாப்புக்கு இருக்கும் அதிகாரிகள் மூலமாகவே, இந்திரா காந்தி பாணியில் நான் கொல்லப்பட வாய்ப்பு உள்ளது" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்!
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான விஜய் கோயல், "உங்களுக்கு பாதுகாப்புக்கு இருக்கும் அதிகாரிகள் மீதே நீங்கள் குற்றம்சாட்டுவதை நினைத்து வருந்துகிறேன். நீங்கள் டெல்லி போலீசுக்கு கெட்ட பெயரை கொடுத்துள்ளீர்கள. நீங்களே உங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளிப்பதை திரும்ப பெற வேண்டும் என டெல்லி பாஜக, அம்மாநில போலீசுக்கு கடிதம் எழுதி உள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.