"அதெல்லாம் அனுமதிக்க முடியாது.." டெல்லி போலீஸ் திட்டவட்டம்.. மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பரபர
டெல்லி: மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி போலீசார் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அவர் மீது கடந்த ஜன. மாதமே வீரர், வீராங்கனைகள் பாலியல் புகார் சுமத்தியிருந்தனர்.
அப்போது விசாரணைக் குழு ஒன்று மட்டும் அமைக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
போராட்டம்: இதையடுத்து அவர்கள் கடந்த மாதம் இறுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். மைனர் வீராங்கனை உள்ளிட்டோர் புகார் அளித்த போதிலும், அவர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்காக வீரர், வீராங்கனைகள் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தே பின்னரே, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இருப்பினும், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாதததைக் கண்டித்து வீரர், வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை விடும் போராட்டத்தில் வீரர், வீராங்கனைகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்திருந்தனர்.
அனுமதி இல்லை: இதற்கிடையே இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று டெல்லி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அதிகாரி கூறுகையில், "இந்தியா கேட் ஒரு போராட்ட தளம் அல்ல.. மல்யுத்த வீரர்கள் அங்குப் போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
மற்ற இடங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என்றாலும் மல்யுத்த வீரர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த வீரர்கள், நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நாளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சாக்ஷி மாலி: அதன் பின்னரே இன்று பதக்கங்களை கங்கையில் விட உள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பாகச் சாக்ஷி மாலி கூறுகையில், "பதக்கங்கள்தான் எங்களின் உயிரும் ஆன்மாவுமாக இருக்கிறது. இந்த பதக்கங்களை கங்கையில் விட உள்ளோம். அதன்பிறகு வாழ்ந்து பிரயோஜனம் இல்லை. அதனால் இந்தியா கேட்டில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார். சாக்ஷி மாலிக், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை கரையில் கண்ணீர் விடும் வீராங்கனைகள்.. நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கையில் விட்டு போராட்டம்
சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்த காட்சிகள் இணையத்தில் படும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல அனில் கும்ளே உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.