ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய ப.சிதம்பரம் மனு டிஸ்மிஸ்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவிடம் தாம் சரணடைய தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்த வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தாம் அமலாக்கத்துறையிடம் சரணடைய தயார் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, திஹார் சிறையில் சிதம்பரம் இருப்பதால் அவர் சாட்சிகளை அழிக்க முடியாது. அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க இப்போதைக்கு எந்த தேவையும் இல்லை என அமலாக்கத்துறை பதிலளித்தது.
ஆனால், சிதம்பரத்தை சரணடைய அனுமதிக்க வேண்டும்; அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தே ஆக வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ப.சிதம்பரம் தாக்கல் செய்ய சரணடைய அனுமதிக்க கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வரும் 19-ந் தேதி வரை சிதம்பரம் திஹார் சிறையில்தான் இருக்க வேண்டும்.