அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி:அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை பாட்டியாலா நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது முக்கிய பிரமுகர்கள் பயணிக்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் 450 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று நிரூபணமானது.
இந்தியாவிலும் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
பின்னர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன இந்திய தலைவர் பீட்டருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல்லை சிபிஐ கைது செய்தது.
அதேபோல ஹெலிகாப்டர் பேர ஊழலில் 90 கோடி மோசடி செய்ததாக ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா ஜனவரி 31ம் தேதி துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டார். 3 நாட்கள் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது
இந்நிலையில் இடைக்கால ஜாமீன் கோரி, அவர் டெல்லி பாட்டியாலா உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். அதை கடந்த பிப்.14 அன்று விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 22-ம் தேதி வரை (இன்று) ராஜீவ் சக்சேனாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் தலா 5 லட்சம் என இரண்டு பிணைத் தொகைகளை ராஜீவ் சக்சேனா செலுத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவரின் ஜாமீன் இன்றுடன் முடிவடைந்த நிலையில், பாட்டியாலா உயர் நீதிமன்றம் 3 நாட்களுக்கு சக்சேனாவின் இடைக்கால ஜாமீனை நீட்டித்துள்ளது. வரும் 25ம் தேதி அவரின் ஜாமீன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.