டூல்கிட் வழக்கு.. சரமாரி கேள்விகள்.. நீதிபதிகளிடம் குட்டு வாங்கிய டெல்லி போலீஸ்
டெல்லி: டூல்கிட் வழக்கில் திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், டெல்லி போலீஸாரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக தொடரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து அதில் விளக்கப்பட்டிருந்தது. குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்திற்கும் இந்த டூல்கிட்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து இந்த டூல்கிட்டை உருவாக்கி, கிரேட்டா தன்பெர்க்குடன் அதைப் பகிர்ந்ததாக திஷா ரவியை கடந்த வாரம் பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த திஷா ரவியிடம் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, "திஷா ரவிக்கும் ஜனவரி 26 வன்முறைக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்க நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த, போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, "சூழ்நிலை ஆதாரங்களை கொண்டு மட்டுமே சதித்திட்டத்தைக் கண்டறிய முடியும்" என்று பொதுவாக பதிலளிக்க, சற்றும் தாமதிக்காத நீதிபதி, "அப்படியெனில், ஜனவரி 26 வன்முறையில் திஷாவுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க, உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையா?" என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
மேலும், "உண்மையில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் திஷாவை எப்படி தொடர்புப்படுத்தினீர்கள்? சதிக்கும், குற்றத்திற்கும் எங்கே தொடர்பு உள்ளது? எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை" என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர்.
இதன்பிறகே, திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்