பாஜக எம்எல்ஏ மீது புகார்.. நாடே எதிர்பார்க்கும் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் டிச.16ல் தீர்ப்பு
டெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் வரும் 16ம் தேதி, டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சேன்கார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், நாடு முழுக்க தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு இந்த பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின், உன்னாவ் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவர் குல்தீப் சிங் சேன்காரால், கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குற்றச்சாட்டு. அப்போது அந்த பெண் மைனர். அதாவது 18 வயது நிரம்பவில்லை. இதுகுறித்து அந்த பெண் தனது குடும்பத்தார் உதவியோடு போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2ம் தேதி, இந்த வழக்கில், சிபிஐ தரப்பு தனது நிறைவு வாதத்தை முன் வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி மாவட்ட நீதிபதியான, தர்மேஷ் ஷர்மா, இன்று வெளியிட்டுள்ள தகவலில், டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம், பாதிக்கப்பட்ட பெண் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. லாரியொன்று, அந்த காரில் மோதியதில், அதிருஷ்டவசமாக இளம் பெண் தப்பினார். ஆனால், அந்த பெண்ணின் இரு உறவுக்கார பெண்கள் பரிதாபமாக பலியாகினர். இதன் பின்னணியில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாஜக எம்எல்ஏ இருப்பதாக, அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சாட்டினர். இதுபோன்ற காரணங்களால், இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.