தமிழகம், கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி.. இன்று இறுதி செய்கிறது தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழகம், கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி செய்கிறது. தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதி நிறைவடைகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் இன்னும் ஒரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது
5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், ஏற்கெனவே நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளனர். விடுமுறைகள், பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை பரிசீலித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா அச்சம் விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அத்துடன் தேர்தல் அட்டவணையையும் தேர்தல் ஆணையம் இன்று இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.