பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.. ராகுலை அவையிலேயே மறைமுகமாக தாக்கிய மோடி!
பல டியூப் லைட்டுகளுக்கு நான் பேசுவது புரிவது இல்லை, அவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள், என்று பிரதமர் மோடி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்தார்.
டெல்லி: பல டியூப் லைட்டுகளுக்கு நான் பேசுவது புரிவது இல்லை, அவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள், என்று பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்தார்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவர் தனது உரையில் இன்னும் 6 மாதம் கழித்து பிரதமர் மோடி வீட்டை விட்டு வெளியே வர முடியாது, அப்படி அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால், இளைஞர்கள் அவரை குச்சியால் அடிப்பார்கள்.
அவர் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று கூறி ஏமாற்றிவிட்டார், என்றார். இந்த நிலையில் ராகுலின் பேச்சை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி ராகுலை லோக்சபாவிலேயே மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
மோடி தனது பேச்சில், கடந்த 70 வருடமாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வலுவானவர்களாக இல்லை. யாருக்கும் தனிப்பட்ட திறமை இல்லை. என்னை குச்சியால் அடிக்க வேண்டும் என்று ஒரு தலைவர் சொல்கிறார். எனக்கு சிரிப்பு வருகிறது. அது எவ்வளவு கடினம் தெரியுமா?
நான் ஆறு மாதத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்தால் மக்கள் என்னை குச்சியால் அடிப்பார்களாம். ஆனால் அந்த 6 மாதத்திற்குள் நான் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வேன். என்னுடைய முதுகை வலிமையாக்குவேன். நீங்கள் தாக்கினால் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் வலிமை அடைவேன். என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
என்னிடம் இதை முன் கூட்டியே அவர் சொன்னதற்கு நன்றி. நான் கடந்த 40 நிமிடமாக பேசி வருகிறேன். ஆனால் என்னுடைய பேச்சின் மின்சாரம் சிலருக்கு பாய இவ்வளவு நேரம் ஆகி உள்ளது. பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறார்கள், என்று மோடி ராகுலை மறைமுகமாக கிண்டல் செய்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சால் அவையில் பெரிய அளவில் சிரிப்பலைகள் எழுந்துள்ளது.