என்னது இது சின்னப்புள்ளதனமா இருக்கு.! மின்சார கட்டண விவகாரம்.. காங்கிரஸை சீண்டிய ஆம் ஆத்மி
Recommended Video
டெல்லி: டெல்லியை விட மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றையாவது, காங்கிரஸ் கட்சியால் கூற முடியுமா என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக டெல்லியில் வாடகைக்கு வசிப்பவர்கள் தனி மீட்டர் பொருத்த வேண்டும். இதற்கான வைப்பு தொகையை டிஸ்காம் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும் என டெல்லி மாநில மின்சார ஒழுங்காற்று ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை திரும்ப பெற தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன் என, மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறி வருகிறார். ஆனால் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு வெறும் கண்துடைப்பு நாடகமே என, மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஷீலா தீட்சித் டிஸ்காம் நிறுவனங்கள் லாபம் அடையும் நோக்கத்தில் தான், தனி மின்சார மீட்டர்களுக்கு வைப்பு தொகை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, இவ்வாறு டெபாசிட் தொகை எதுவும் வசூவிக்கப்படவில்லை. தங்கள் ஆட்சியின் போது மின்சார கட்டணமும் நுக்வோரை பாதிக்காத வகையில் தான் இருந்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாக ஆம் ஆத்மி ஆட்சியில் மின்சார கட்டணம் மிக அதிகமாக உள்ளது என குற்றம் சுமத்தியிருந்தார். டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் குற்றச்சாட்டுகளை, ஆம் ஆத்மி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளரான சவுரப் பரத்வாஜ், மின்சார மீட்டர் டெபாசிட் தொகை தொடர்பாக டெல்லி அரசு மீது காங்கிரஸ் அபாண்ட பழியை போட்டுள்ளது. எங்களை குறை கூறும் முன் மாநிலத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் என்ற முறையில், சில விஷயங்களை காங்கிரஸாா் கருத்தில் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது நினைவில்லையா என கேள்வி எழுப்பினார். ஆனால் கடந்த நான்கரை ஆண்டு கால ஆம் ஆத்மி ஆட்சியில், இதுவரை மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார் சவுரப் பரத்வாஜ். இதுவே எங்களது மிகப்பெரிய சாதனை என்றார்.
மேலும் நாட்டிலேயே குறைவாக மின் கட்டணம் வசூல் செய்யப்படுவது தலைநகர் டெல்லியில் தான். நாட்டில் இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் உள்ளது. அந்த வகையில் இந்த சவால் விடுகிறோம். உங்கள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்திலாவது, டெல்லியை விட குறைவாக மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அப்படி நிரூபிக்கும் வரை இது போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி மீது கூறுவதை, காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண்டும் என காட்டமாக கூறினார்.