விவசாயிகள் போராட்டம்..கொச்சைப்படுத்தும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டும் காங், அகாலி தள், சமாஜ்வாதி
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை தாண்டி தொடருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை நக்சல்கள், பிரிவினைவாதிகள் என கொச்சைப்படுத்தும் பாஜக தலைவர்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சிரோமணி அகாலி தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று போராடும் விவசாயிகளின் கோரிக்கை. ஒரு மாதம் என்ன 6 மாதங்களானாலும் சரி 2024 ஆம் ஆண்டானாலும் சரி தொடர்ந்து போராடுவோம் என்பது விவசாயிகள் நிலைப்பாடு.
இதனிடையே டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அர்பன் நக்சல்கள், நக்சல்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என சகட்டுமேனிக்கு பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இந்த விமர்சனங்களை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமரீந்தர் சிங் ஆவேசம்
இது தொடர்பாக அமரீந்தர் சிங் கூறியதாவது: டெல்லியில் போராடுவது பஞ்சாப் விவசாயிகள் மட்டும் அல்ல. பாஜக ஆளும் ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் விவசாயிகளும்தான் டெல்லி போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் நக்சல்கள் எனில் நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம் அல்லவா?
பாஜகவுக்கு கண்டனம்
போராடும் விவசாயிகளின் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தி அவதூறாக பேசுவது சரியான அணுகுமுறை இல்லை. பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகளை போராடும் விவசாயிகள் புறந்தள்ளிவிடுங்கள். அமைதிவழியில் போராடும் விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு முத்திரை குத்துகிற போக்கை பாஜக கைவிட வேண்டும். இவ்வாறு அமரீந்தர்சிங் கூறினார்.
அகாலிதள் எதிர்ப்பு
சிரோமணி அகாலிதளத்தின் விவசாய சங்க தலைவர் சிகந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைத்து போராடும் விவசாயிகள் மீது எளிதாக ஏதேனும் ஒரு முத்திரை குத்திவிட்டுப் போகும் போக்கை பாஜக கைவிட வேண்டும். இத்தகைய கருத்துகளை வெளியிடும் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
சமாஜ்வாதி கட்சி வார்னிங்
இதனிடையே சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம்கோவிந்த் செளத்ரி, விவசாய சட்டங்களை ஆதரிக்கின்ற தலைவர்களை உங்கள் கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள். அத்தகைய தலைவர்களை புறக்கணிப்பு செய்யுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.