விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர எதிர்ப்பு- சட்டங்களையே வாபஸ் பெற விவசாயிகள் வலியுறுத்தல்
டெல்லி: டெல்லியில் 14 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து மத்திய அரசு விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தகைய திருத்தங்களை ஏற்கப் போவதில்லை; ஒட்டுமொத்தமாக விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கொட்டும் பனியிலும் வாட்டும் கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் ஏற்கனவே 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை.
நாடு தழுவிய பாரத் பந்த்
இதனிடையே டெல்லியில் போராடும் விவசாயிகள் நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்தனர். இந்த பாரத் பந்த் போராட்டம் பல மாநிலங்களில் வெறறிகரமாக நடத்தப்பட்டது. பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது.
அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவசாய சங்க பிரநிதிகள் நேற்று இரவு சந்தித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
விவசாய சட்டங்களில் திருத்தம்?
இதனிடையே மத்திய அரசுடனான 6-ம் கட்ட பேச்சுவார்த்தைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர உள்ளதாகவும் அது தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரைவு அறிக்கை மீது முடிவு
மத்திய அரசின் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். இந்த முடிவுக்குப் பின்னரே மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் விவசாயிகள் சங்கங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டங்களை வாபஸ் பெறுக
இருப்பினும் சில விவசாய சங்கங்களோ, புதிய விவசாய சட்டங்களை முழுவதுமாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். புதிய சட்டங்களை திரும்பப் பெறாமல் திருத்தங்கள் கொண்டுவருவதை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.