டெல்லி போராட்டம்- 18 போலீசார் படுகாயம்- ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணியின் போது ஏற்பட்ட மோதல்களில் 18 போலீசார் படுகாயம் அடைந்தனர். ஒரு போலீஸ்காரர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று பல லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். சில விவசாயிகள் போலீசார் அனுமதி அளித்த பாதையில் இருந்து திசைமாறி சென்றனர். இதனால் பல இடங்களில் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.
உச்சகட்டமாக டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் சீக்கியர் கொடியை ஏற்றினர். இதனால் டெல்லி மாநகரமே குடியரசு தின நாளில் போர்க்களமாக உருமாறியது.
இன்றைய மோதல்களில் விவசாயிகளில் ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 18 போலீசார் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவர் ஆபத்தான் நிலையில் உள்ளார். படுகாயம் அடைந்த போலீசார் டெல்லி எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.