டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் - விவசாய சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது; விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது என்பது குற்றச்சாட்டு. இதனால் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன் உச்சகட்டமாக டெல்லியை நோக்கி குடும்பம் குடும்பமாக விவசாயிகள் அணிதிரண்டனர். விவசாயிகள் போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய எழுச்சியுடன் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியை நோக்கி திரண்டனர். இவர்கள் அனைவரையும் ஹரியானா அரசு தடுத்து பார்த்தது; டெல்லி எல்லையில் தடுத்து பார்த்தனர்.
ஆனால் போலீசாரின் தடியடிகள், கண்ணீர்புகை குண்டு வீச்சுகள் என அத்தனை ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு டெல்லிக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலையை விவசாயிகளின் வீரமிக்க போராட்டம் உருவாக்கி உள்ளது. டெல்லியில் தற்போது புராரி நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டங்க்ளை நடட்தி வருகின்றனர்.
வங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த விவசாயிகளுக்கான உணவுகளை குருத்வாராக்களும் ஆம் ஆத்மி கட்சியினரும் செய்துள்ளனர். தங்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை. சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ஏற்கனவே டிசம்பர் 3-ந் தேதியன்று 32 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தை விவசாயிகள் கைவிடுவது தொடர்பாக அவர்களுடன் எந்த நேரத்திலும் பேசுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.