100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100வது நாளை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு 12-ம் கட்ட பேச்சுவார்த்தையை ஓரிரு நாட்களில் நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100-வது நாளை நெருங்கி உள்ளது. இன்று 97-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.
200 விவசாயிகள் பலி
இப்போராட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை மரணித்துள்ளனர். மத்திய அரசு 11 முறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
வாபஸ் பெற கோரிக்கை
விவசாயிகளைப் பொறுத்தவரை 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு இந்த சட்டங்களை செயல்படுத்துவதில் படுமுனைப்பாக இருந்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றம் தலையிட்டுதான் இந்த சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு வரும் 8-ந் தேதி தொடங்க உள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை
அந்த அமர்வில் எதிர்க்கட்சிகள் மீண்டும் இந்த பிரச்சனையை எழுப்பக் கூடும். அதற்கு முன்னதாக 12-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.