டெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
டெல்லி: மத்திய பாஜக அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வாட்டும் கடுங்குளிரிலும் டெல்லியில் 8-வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவர்த்தையை விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்துகின்றனர்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் தங்களுக்கு பேராபத்து என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்துடன் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 8 நாட்களாக டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 71 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான குளிர்வாட்டுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் இரவிலும் சாலையில் அமர்ந்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே திங்கள்கிழமையன்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியது.
ஆனால் இதனை விவசாய சங்க பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராடி வரும் நிலையில் 32 சங்க பிரதிநிதிகளை மட்டும் மத்திய அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்க முடியாது எனவும் கூறினர். இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று டெல்லியில் 2-வது கட்டமாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.