முகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி!
டெல்லி விவசாயிகளின் போராட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது
டெல்லி: மத்திய அரசின் நிபந்தனை பேச்சுவார்த்தையை மீண்டும் நிராகரித்த விவசாயிகள், தங்களது 5- வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... இதையடுத்து சோஷியல் மீடியா முழுவதுமே விவசாயிகளின் போராட்ட போட்டோக்களை பொதுமக்கள் ஷேர் செய்து வருகிறார்கள்!
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய கோரியும், "டெல்லி சலோ" என்ற பெயரில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டரில் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இன்னும் சில விவசாய அமைப்புகள் அணி திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதனால் டெல்லியில் பதற்றம் நீடித்து வருகிறது. போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாதவாறு, உத்தர பிரதேசம், அரியானா எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
குளிர்நீர்
அதையும் மீறி விவசாயிகள் முன்னேறியதால், அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.. தண்ணீர் பீய்ச்சப்பட்டன.. ஏற்கனவே குளிரில் நடுங்கும் விவசாயிகளுக்கு இந்த குளிர்நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.. நடுரோட்டில் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டது.. இப்படி பலவிதங்களில் எதிர்ப்பு வந்தாலும், அத்தனையையும் முறியடித்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அமைச்சர்கள் குழு
3ம் தேதி பேச்சுவார்த்தை என்று மத்திய அரசு சொல்லி இருந்தாலும், இது சம்பந்தமான உறுதியான தகவல் இன்னும் வரவில்லை.. ஆனால், மத்திய அமைச்சர்களை கொண்ட ஒரு குழு அமைத்து, அந்த குழுதான் தங்களிடம் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது சம்பந்தமாகவும் மத்திய அரசு எதுவுமே சொல்லவில்லை.
குளிர்
இதனிடையே, நேற்றிரவுகூட போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது... ஏற்கனவே தலைநகரில் குளிர் அதிகமாக உள்ளது.. அதிலும் இந்த நவம்பர் மாசத்தில் கடுமையான குளிர் அங்கு நிலவுவது இயல்புதான்.. இப்போது 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கிறதாம்.. இதில்தான் அவர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் வயதானவர்கள்தான்.. இவர்களுடன் பெண்களும், குழந்தைகளும் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.
காயங்கள்
வயதான பெரியவர்கள் என்றும் பாராமல் இந்த விவசாயிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதல் தொடர்பான போட்டோக்கள் அத்தனையும் சோஷியல்மீடியாவில் வைரலாகி வருகிறது.. அதில் ஒரு வயதான விவசாயிக்கு ஒரு கண் முழுக்க காயங்கள் உள்ளன.. அதற்கு மருந்து வைத்து பேண்டேஜ் கட்டி இருக்கிறார்கள்.
சிவந்த முகம்
அதிலும் இன்னொரு விவசாயியின் போட்டோ நெஞ்சை பிசைந்தெடுக்கிறது.. அவருக்கு எப்படியும் 70 வயதிருக்கும்.. முகமெல்லாம் காயங்கள் உள்ளன.. அதிலும் கண்களில் நிறைய தாக்கி உள்ளதுபோல தெரிகிறது.. கண், முகம் எல்லாம் சிவந்து வீங்கி உள்ளது.. அதற்கு மருந்துகூட போடப்படவில்லை. ரத்த காயங்கள் தென்பட, இந்த விவசாயியின் போட்டோவைதான் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.. "அந்த தாத்தாவை அடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?, அந்த காயம் ஆறினதும், உங்களுக்கான உணவை விளைவிக்கதானே அவர் உழைக்க போகிறாரு?" என்று இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள்.