டெல்லியில் போராட்டம் தீவிரம்.. செல்போன் சேவை முடக்கம்.. இன்டர்நெட் மட்டுமல்ல, வாய்ஸ் அழைப்பும்
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் டெல்லியின் சில இடங்களில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வன்முறைகள் அல்லது போராட்டங்கள் அதிகமாக உள்ள இடங்களில் செல்போன் இணையதள சேவைகள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் டெல்லியில் இணையதள சேவை மட்டுமின்றி, எஸ்எம்எஸ், குரல் அழைப்புகள் போன்ற அனைத்து வகையான தொலைபேசி வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்வாறு தற்காலிகமாக சேவையை செய்து உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
இதேபோல ஜியோ, ஐடியா, வோடபோன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வோடபோன் வெளியிட்ட அறிவிப்பில், அரசு உத்தரவால்தான் தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வந்ததும் சேவை திருப்பி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் செங்கோட்டை பகுதியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. செங்கோட்டை உள்ளிட்ட வேறு சில பதட்டமான பகுதிகளில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான, டி.ராஜா கைது செய்யபட்டுள்ளார். இதேபோல ஆயிரக்கணக்கானோர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கங்குலி மகள் சனாவா இது.. என்ன ஒரு ஆவேசம்.. அப்பா மாதிரியே.. நாட்டையே பேச வைத்துவிட்டாரே
உலகிலேயே அதிகமாக இணையதள சேவையை முடக்கும் நாடு இந்தியா என்ற பட்டியல் நேற்று வெளியாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடைபெறுகிறது என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இப்போது இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள சில பகுதிகளில் செல்போன் சேவை முழுக்க முழுக்க முடக்கப்பட்டு உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போராட்டங்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.