ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
டெல்லி; ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ305 கோடி அன்னிய முதலீடு பெற்றது. இதில் முறைகேடு நடந்தது என்பது வழக்கு.
இந்த அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ, அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளன. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
ப.சிதம்பரம் மீது ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ந் தேதி டெல்லியில் ஆஜராக சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.
தற்போது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை சிதம்பரம் நாடியுள்ளார்.