அமலாக்கப் பிரிவு வழக்கு- ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அன்னிய முதலீடு பெற உடந்தையாக இருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்பது சிபிஐ வழக்கு. இவ்வழக்கில் ஆகஸ்ட் 21-ந் தேதி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை டெல்லி திகார் சிறையிலேயே கைது செய்தது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் 86 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார் சிதம்பரம்.
சிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் சிதம்பரம் திகார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.