நிர்பயா குற்றவாளிகளின் கடைசி வாய்ப்பும் தகர்ந்தது.. சுப்ரீம் கோர்ட்டில் போட்ட மனு டிஸ்மிஸ்!
டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் 3 பேர் தாக்கல் செய்த கடைசி நேர மனுவை டெல்லி ஹைகோர்ட் நிராகரித்த நிலையில் அவர்களில் பவன் குப்தா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அதிகாலையில் விசாரித்த சுப்ரீம் கோர்ட் அம்மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
Recommended Video
நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு ஏற்கனவே 3 முறை தேதி குறிக்கப்பட்டது.
ஆனால் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை நிறைவேறுவதை ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்று வந்தனர். இந்த நிலையில் நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிறைவடைந்தது.
அவர்கள் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் வியாழக்கிழமையன்று ஒருவழியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து நிர்பயா கொலை குற்றவாளிகளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான ஏற்பாடுகளை டெல்லி திஹார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. இந்த நிலையில் புதிய திருப்பமாக நிர்பயா கொலை குற்றவாளிகள் 3 பேர் வியாழக்கிழமை இரவு திடீரென டெல்லி உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது வியாழக்கிழமை இரவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் தொடக்கத்தில் எந்த ஆவணங்களையுமே மனுவில் இணைக்கவில்லையே ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங்,. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜெராக்ஸ் மிஷின்கள் இயக்கப்படவில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க ஏதேனும் ஒரு சட்டப்பூர்வமான வாதத்தை முன்வைக்க நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அப்போது, குற்றவாளியின் அக்ஷய்குமார் மனைவியின் விவாகரத்து மனு நிலுவையில் உள்ளது; மனித உரிமைகள் ஆணையத்தில் மனு நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டார். ஆனால் இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும், ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையாக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் இந்த உத்தரவின் புனிதத்தன்மையை கொஞ்சமாவது மதித்து நடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். அப்போது, நீதிபதிகள் வேகம் காட்டினால் நீதி புதைக்கப்பட்டுவிடும் என்று வழக்கறிஞர் ஏபி சிங் கூறினார்.
பின்னர் நிர்பயா குற்றவாளிகளின் கடைசிநேர மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பவன் குப்தாவின் சார்பில் அவரது வக்கீல் ஏபி சிங் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். ஹைகோர்ட்டில் வாதிட்ட அதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் அவர் அவசர மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் பானுமதி, பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச அவசர மனுவாக விசாரித்தது. நீண்ட விவாதத்திற்குப் பின்னர் பவன் குப்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதனால் நான்கு பேரையும் தூக்கிலிடுவதற்கு கடைசி நிமிடத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த இடையூறும் நீங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து நிர்பயாவின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிர்பயாவின் தாயார் மகிழ்ச்சி:
இந்த தீர்ப்பு குறித்து கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார். அவர் கூறுகையில், எனது மகளுக்கு கடைசியாக நீதி கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குற்றத்துக்காக மொத்த நாடும் அவமானமடைந்தது. இன்று நாட்டுக்கும் நீதி கிடைத்துள்ளது என்றார் ஆஷா தேவி.
குற்றவாளிகளை கடைசியாக பார்க்க பெற்றோர்களுக்கு தடை:
இதற்கிடையே, தங்களது மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அக்ஷய் சிங்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தூக்கிலிடுவதற்கு முன்பு 10 நிமிடங்கள் பார்க்க அனுமதிக்கலாம் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பரிந்துரை செய்தார். ஆனால் கோர்ட்டுக்கு வந்திருந்த திஹார் சிறை அதிகாரிகள், சிறை விதிமுறைகளில் அதற்கு இடமில்லை என்று கூறி கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.