ஐ.என்.எக்ஸ். வழக்கு:ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது ஒருவாரத்துக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக அன்னிய முதலீட்டை அனுமதித்து ஆதாயம் அடைந்தார் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்பது சிபிஐ தொடர்ந்த வழக்கு. இவ்வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் 60 நாட்களுக்கு மேல் இருந்த நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது. ஆனால் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில் திகார் சிறையிலேயே அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.
மேலும் சிதம்பரத்தை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தது. இதனால் ஜாமீன் கிடைத்தும் சிதம்பரம் விடுதலையாக முடியவில்லை.
இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைத் இன்று விசாரித்தார். இம்மனு மீத 1 வாரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதி சுரேஷ் கைத் உத்தரவிட்டார்.