நீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்
டெல்லி: டெல்லி வன்முறை வழக்கு விசாரித்த நீதிபதி முரளிதர் திடீர் இடமாற்றம் நீதித்துறையில் ஒருவித அச்ச உணர்வை உருவாக்கி உள்ளது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் கூறியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு நீதிபதி மதன் பி லோகுர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
டெல்லி வன்முறைகள் தொடர்பான வழக்கை நீதிபதி முரளிதர் விசாரிக்காமல் இருந்தால் அவரை இடம்மாற்றம் செய்தது என்பது நீதித்துறை சார்ந்த ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டிருக்கும். நீதிபதி முரளிதர் இடமாற்றம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு நேரம்தான் இப்போது முக்கியமானது.
வழக்கமான அலுவலக நேரங்களில் இந்த அறிவிப்பை வெளியிடாமல் இரவு 11 மணிக்கு இதை வெளியிட்டிருக்கிறார்கள். இது சரியானது அல்ல. இது சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நீதிபதிகளை இரவில் இடமாற்றம் செய்தால் அவர்களுக்கு ஆளுநரோ அல்லது தலைமை நீதிபதியோ உடனே பதவி பிரமாணம் செய்து வைப்பார்களா? என நிறைய கேள்விகள் எழுகின்றன.
பணியிட மாற்றங்களில் நீதிபதிகளை இப்படி பந்தாடக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் அரசுக்கு கண்டிப்பாக எடுத்துக் கூற வேண்டும். இத்தகைய திடீர் இடமாற்றங்கள் நிச்சயம் ஒருவித அச்ச உணர்வையே உருவாக்கும். ஆகையால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். நீதித்துறை என்பது சுதந்திரமாக இயங்க வேண்டும். இத்தகைய திடீர் இடமாற்றங்கள் நீதித்துறையின் மாண்பை சீர்குலைக்கிறது.
இவ்வாறு மதன் பி லோகுர் கூறியுள்ளார்.