டெல்லி ஹைகோர்டில் நீதிபதி முரளிதருக்கு நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை.. எப்படி நடந்திருக்குன்னு பாருங்க
டெல்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதருக்கு ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிபதிகள் ஒன்று கூடி பிரியாவிடை அளித்தனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் முரளிதர், தமிழரான இவர் சென்னையில் வழக்கறிஞராக பயிற்சி செய்தவர். படிப்படியாக டெல்லியில் வழக்கறிஞராக ஆனவர் அங்கு பிரபலமான வழக்கறிஞராக மாறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆனார்.
1984 சீக்கிய எதிர்ப்பு கலவரம், உத்தர பிரதேச ஆயுத சட்ட வழக்கு, எல்ஜிபிடி உடல் உறவு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்தை ஆர்டிஐ மூலம் தெரிந்து கொள்வது தொடர்பான வழக்கு என்று பல வழக்குகளில் இவர் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.போபால் விஷ வாயு வழக்கில், இவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞராக ஆஜராகி அவர்களுக்கு நீதியும் பெற்றுத்தந்தார். இவர் மொத்தம் 3100 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இடமாற்றம்
நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நீண்ட காலமாக உள்ளார். இவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அன்று பஞ்சாப் ஹரியானா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.. இந்த பரிந்துரைப்படி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாறுவதற்கு நீதிபதி முரளிதரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
பாஜக தலைவர்கள்
இதற்கிடையே கடந்த மாத இறுதியில் டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் அப்போது இல்லாததால் நீதிபதி முரளிதர் விசாரிக்க வேண்டி வந்தது. அந்த வழக்கில் வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றாக அன்றைக்கு ஒரு நாள் மட்டும் விசாரித்த அவர், பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக எப்ஐஆர் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அத்துடன் 3 பேரின் பேச்சுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒளிபரப்ப வைத்து டெல்லி போலீசார் அதிர்ச்சி அடையவைத்தார்.
இன்று பிரியாவிடை
இதற்கிடையே அன்று இரவே நீதிபதி முரளிதரை பணியிட பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் நீதிபதி முரளிதர் இன்றுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தை விட்டு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறார். இதற்காக இன்று அவருக்கு டெல்லி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பிரியா விடை அளித்தனர்.
|
நீதிபதிகள் நெகிழ்ச்சி
அவருக்கு ஏராளமான வழக்கறிஞர்கள் பிரியா விடை அளிக்க குவிந்ததால் நீதிமன்றத்தின் அனைத்து அரங்குகளிலும் வழக்கறிஞர்கள் நிறைந்து காணப்பட்டனர். நீதிபதிகள் அவருடன் மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோட்ட படி பிரியாவிடை அளித்தனர். டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல் பேசுகையில், எந்தவொரு சட்டத்தின் தலைப்பிலும் விவாதிக்கக்கூடிய மற்றும் எந்தவொரு விஷயத்தையும் தீர்மானிக்கக்கூடிய ஒரு சிறந்த நீதிபதியை நாங்கள் இழக்கிறோம் என்றார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நிறைந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.