வெறுப்பு பேச்சால் கலவரம்.. கபில் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர்: ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: டெல்லியில் நடைபெறும் கலவரங்கள் பின்னணியில், பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா உள்ளிட்டோரின் வெறுப்பு பேச்சுதான் இருப்பதாக குற்றம்சாட்டிய ஹைகோர்ட், இதுவரை அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்ததோடு, உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. நாளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
Recommended Video
டெல்லியில் கடந்த சில தினங்களாக குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே நடைபெறும் வன்முறை வெடித்துள்ளது. இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சமூக சேவகர் ஹர்ஸ் மந்தர் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த வன்முறைகளுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இன்று மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடைபெறும்போது நீதிமன்றத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றவர்களின் பேச்சுகளால்தான் வன்முறை வெடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பின் நடந்த விசாரணையில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டது. அதன்படி, டெல்லியில் நடந்து வரும் மதக் கலவரங்கள் தொடர்பான வீடியோக்களை விசாரிக்க போவதாக டெல்லி ஹைகோர்ட், வழக்கு விசாரணையின்போது, தெரிவித்துள்ளது.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோரின் வீடியோவை போலீஸ் பார்த்ததா, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது. இதற்கு டெல்லி போலீஸ் தரப்பும், உள்துறை அமைச்சகம் தரப்பும் அப்படிபட்ட வீடியோக்களை பார்க்கவில்லை என்று கூறியது.
இதை கேட்ட நீதிபதிகள், நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்களா? உண்மையில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டனர். இதையடுத்து இன்று ஹைகோர்ட்டில் ஒளிபரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வீடியோ ஒளிபரப்பிற்கு பின் போலீஸ், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பதிலாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அனைத்து தரப்பு வக்கீல்கள் மற்றும் டி.சி.பி ராஜேஷ் தியோ மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்னிலையில் இந்த வீடியோ பதிவு நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. வீடியோவை பார்த்த நீதிபதி முரளிதர், இந்த நிலைமை மிகவும் விரும்பத்தகாதது என்று அதிருப்தி வெளிப்படுத்தினார். "சில தலைவர்கள் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசும் வீடியோக்களை நாம் அனைவரும் பார்த்தோம், இது ஒவ்வொரு செய்தி சேனலிலும் உள்ளது. கமிஷனர் ஆபீசில் நிறைய டீவி இருக்குமே, அப்படியும் பார்க்கவில்லையா" என்று நீதிபதி வினவினார்.
இதையடுத்து தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரலுக்கு கேள்விக் கணைகளை தொடுத்தனர் நீதிபதிகள். சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு நீங்கள் எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்திருக்கும்போது, இந்த வெறுப்பு உரைகளுக்கு எதிராக ஏன் அதை பதிவு செய்யவில்லை? வெறுப்பு பேச்சுதான், கலவரத்திற்கான அலாரம். எனவே, இதில் ஒரு குற்றம் இருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லையா?
நீங்கள் எப்ஐஆர் பதிவு செய்ய எது பொருத்தமான நேரம் என்று நினைக்கிறீர்கள்? ஒரு வழக்கை பதிவு செய்வதற்கு முன்பு எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? நீங்கள் எப்போது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வீர்கள்? நகரம் முழுவதும் எரிந்த பிறகா? காவல்துறை என்றால் என்ன என்று நீங்கள் காட்ட வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், வெறுப்பு பேச்சு பேசியோர்கள் (கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர்) மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். இதை டெல்லி போலீஸ் கமிஷனரிடம் சொல்லுங்கள். நாளை, இதற்கான பதிலை காவல்துறை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு கூறி, வழக்கு நாளைக்கு, ஒத்திவைக்கப்பட்டது.