டெல்லியில் சிகிச்சை பெறுவோருக்கு பாதுகாப்பு- நள்ளிரவில் ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: வன்முறைகளில் படுகாயமடைந்து வடகிழக்கு முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது.
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் 2 நாட்களாக வன்முறை தாண்டவமாடியது. இதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அமைப்பு சார்பாக, வடகிழக்கு டெல்லியின் முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்தது. இதேபோல் ஆவணபட இயக்குநர் ராகுல் ராயும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், முஸ்தாபாத் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களை வன்முறை கும்பல் வழிமறுத்து பிரிஜ்புரி பகுதிக்கு திருப்புமாறு மிரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுக்களை நள்ளிரவில் நீதிபதிகள் முரளிதர் மற்றும் ஏஜே பாம்பானி ஆகியோர் நள்ளிரவில் விசாரித்தனர்.
மதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்
அப்போது, முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மேலும் மேல்சிகிச்சைக்காக அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பாதுகாப்பாக ஜிடிபி மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின் போது டெல்லி அரசின் கூடுதல் வழக்கறிஞர் சஞ்சய் கோஷ் ஆஜராகி இருந்தார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.