டெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: டெல்லியில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க ராணுவத்தை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி ஹைகோர்ட் நிராகரித்துள்ளது.
Recommended Video
டெல்லி கலவரம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த ஹைகோர்ட், நிலைமையைக் கண்காணிப்போம், இப்போதைக்கு, ராணுவத்தை டெல்லிக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை, என்று தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பாஜக தலைவர்கள் பேசிய வெறுப்பு பேச்சுக்கள் அடங்கிய வீடீயோக்களை நீதிமன்றத்தில் ஒளிபரப்பக் கூறியிருந்தார். அதைப்பார்த்த பிறகு, அவர் கூறுகையில், எல்லா வீடியோக்களிலும் ஒரே மாதிரி கோஷங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன என்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது. காவல்துறை இதுதொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. இது ஒரு தவறான மெசேஜை மக்களிடம் கொண்டு செல்லும். இந்த முழக்கத்தை மீண்டும் பலரும் பயன்படுத்துவதை தடுக்காது. எனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு நீங்கள் எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்திருக்கும்போது, இந்த உரைகளுக்கு எதிராக ஏன் அதை பதிவு செய்யவில்லை? இதில் ஒரு குற்றம் இருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லையா? இவ்வாறு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
விடமாட்டோம்.. எங்களை தாண்டி உள்ளே போகட்டும்.. இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள், சீக்கியர்கள்
மேலும் நீதிபதி கூறுகையில், எங்கள் கவலை என்னவென்றால், அரசியலமைப்பு நீதிமன்றமாக நாங்கள் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் கண்மூடித்தனமாக இருக்க முடியாது என்றார்.
மேலும், அரசு வக்கீலான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம்,"நீங்கள் எப்ஐஆர் பதிவு செய்ய எது பொருத்தமான நேரம் என்று நினைக்கிறீர்கள்? ஒரு வழக்கை பதிவு செய்வதற்கு முன்பு எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? நீங்கள் எப்போது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வீர்கள்? நகரம் முழுவதும் எரிந்த பிறகா? காவல்துறை என்றால் என்ன என்று நீங்கள் காட்ட வேண்டும், " என்று தெரிவித்தார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.