ஐசியுவில் கொரோனா நோயாளிகள்.. திடீரென 80 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லை.. மருத்துவர் உட்பட 12 பேர் பலி
டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகள் பல மடங்கு அதிகரித்தும்கூட கொரோனா பரவல் டெல்லியில் குறையவில்லை.
இதனால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பவிட்டன. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நூற்றுக் கணக்கான கொரோனா நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உ.பி-இல் ஆக்சிஜன் இல்லாமல்.. 10 நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் பலி.. பாஜக எம்எல்ஏ பரபரப்பு கடிதம்
ஆக்சிஜன் தட்டுப்பாடு
இதுமட்டுமின்றி அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகங்களே தெரிவித்துள்ளன. பல நாட்களாகவே டெல்லியில் இதே நிலைதான் நீடிக்கிறது. தலைநகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மருத்துவர் உட்பட 12 பேர் பலி
இந்நிலையில், டெல்லியிலுள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 12 பேரில் ஒருவர் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லை
ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்தவர்களில் 6 பேர் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் சுமார் 12.15 மணிக்குத் தீர்ந்துவிட்டது, ஆக்சிஜன் லாரிகள் 1.30 மணிக்குத் தான் வந்தது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் உள்ள 230 நோயாளிகள் சுமார் 80 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறை
டெல்லியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, ஆக்சிஜன் தீர்வதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன், ஆக்சிஜன் லாரி வந்து சேர்ந்தது. சரியான நேரத்தில் ஆக்சிஜன் லாரி வந்ததால் அப்போது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், இன்று ஆக்சிஜன் லாரி வரத் தாமதமானதால் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.