மத்தியில் அடுத்து யார் ஆட்சி? தீர்மானிக்கப்போவது டெல்லியிலுள்ள 7 தொகுதிகள்தான்.. நம்ப முடிகிறதா?
டெல்லி: நாட்டில் மொத்தம் 545 லோக்சபா தொகுதிகள் இருந்தபோதிலும், வெறும் 7 தொகுதிகளே உள்ள தலைநகர் டெல்லி பிராந்தியம் தான் யார் ஆட்சியை பிடிப்பார்கள், என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?
ட்ரெண்ட் செட்டர், என்பார்களே அது தலைநகர் டெல்லிக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. அனைத்து மொழி பேசும் மக்களும் வசிப்பதும், நாட்டின் தலைநகராக இருப்பதும், டெல்லிக்கு, இந்த விஷயத்தில் மிகவும் பொருந்திப் போகிறது.
ஆம்.. 1998-ஆம் ஆண்டு முதல் டெல்லி எந்த கட்சிக்கு அதிக ஆதரவை அள்ளி வழங்குகிறதோ, அந்தக் கட்சிதான் மத்தியில் ஆட்சியைப் பிடித்து வருகிறது.
மக்களே இந்த 3 மாவட்டங்களில் அனல்காற்று அதிகமாக இருக்கும்... வானிலை மையம் வார்னிங்!
1998 டிரெண்ட்
கடந்த 1998 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, டெல்லியில், பாஜக 6 தொகுதிகளை வென்றது .அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. பதிமூன்று மாதங்கள் இந்த அரசு நீடித்த நிலையில், ஆட்சி பெரும்பான்மையின்றி கலைந்ததால், 1999ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்றது தேர்தல். அந்த தேர்தலின் போது, டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்றது. மீண்டும் வாஜ்பாய் தலைமையில், பாஜக ஆட்சி உருவானது.
காங்கிரஸ் பக்கம் காற்று
2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், டெல்லியில் 6 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெல்ல முடிந்தது. அப்போது மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்தது.
மீண்டும் காங்கிரஸ்
இது மட்டுமா.. 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்திரா காந்தி ஆட்சி காலத்துக்கு பிறகு தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த பெருமையை மன்மோகன் சிங் பெறுவதற்கு இந்த தேர்தல் காரணமாக அமைந்தது.
பாஜக பக்கம் சாய்ந்த டெல்லி
2014ஆம் ஆண்டு, மற்றொருமுறை டெல்லி தனது தேர்தல் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கைப்பற்றிய இந்தத் தேர்தலில், மத்தியிலும் பாஜக தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்தது. எனவே, இம்முறை டெல்லி மீது அரசியல் பார்வையாளர்கள் கவனம் திரும்பியுள்ளது.