புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்!
டெல்லி: டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்று விமானம் ஒன்று கோளாறு காரணமாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான அலியன்ஸ் ஏர் 9643 விமானத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி 8.40க்கு இந்த விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மேலே சென்ற உடனே அதில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதன் லேண்டிங் கியரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்பக்கம் இருக்கும் டயர்கள் உள்ளே செல்லாமல் அப்படியே இருந்துள்ளது. இதனால் விமானம் மீண்டும் யு-டர்ன் போட்டு டெல்லிக்கு வந்தது.
10 நிமிடத்தில் மீண்டும் வந்த அலியன்ஸ் ஏர் 9643 விமானம் டெல்லியில் தரையிறங்கியது. அந்த விமானம் தரையிறங்கும் போது பெரிய அளவில் டயரில் இருந்து நெருப்பு வந்துள்ளது. ஆனால் இதனால் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
விமானத்தில் சென்ற 59 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று அலியன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் 10.15க்கு வேறு விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதுகுறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் என்று அலியன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.