சீன பத்திரிகையில்... இந்தியாவை விமர்சித்து கட்டுரை... டெல்லி செய்தியாளர் கைது!!
டெல்லி: டெல்லி செய்தியாளர் ராஜீவ் சர்மாவை சிறப்பு போலீஸ் கைது செய்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வைத்து இருந்த குற்றச்சாட்டில், ஓஎஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
போர் சார்ந்த விவகார ஆய்வாளராக தற்போது பணியாற்றி வரும் ராஜீவ் சர்மா இதற்கு முன்பு யுஎன்ஐ, தி டிரிபியூன், சகால் டைம்ஸ் ஆகியவற்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சமீபத்தில் சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கட்டுரை ஒன்று எழுதி இருந்தார். இதன் கீழ் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு... கேரளா மேற்குவங்கத்தில் 9 பேர் கைது!!
பாதுகாப்பு ஆவணங்கள்
இதுகுறித்து டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் டிஜிபி சஞ்சீவ் குமார் கூறுகையில், ''ராஜீவ் சர்மா பிதம்புரா பகுதியைச் சேர்ந்தவர். இவரை தென்மேற்கு டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மறுநாளே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஆறு நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். இவரிடம் பாதுகாப்பு சார்ந்த சில ஆவணங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.
விமர்சனம்
ராஜீவ் கிஸ்கிந்தா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ராஜீவ் சர்மா நடத்தி வருகிறார். இதில் அவருக்கு 11,900 சந்தாதாரர்கள் இருக்கின்றனர். கைது செய்யப்படும் அன்றும் இரண்டு வீடியோக்களை தனது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஒரு வீடியோ எட்டு நிமிடங்கள் கொண்டது. இந்த வீடியோவில் மாஸ்கோவில் இந்தியா சீனா மேற்கொண்டு இருந்த பேச்சுவார்த்தை குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.
உத்தரவாதம்
எல்லையில் இருதரப்பிலும் இன்னும் அமைதிக்கான வழி எட்டப்படவில்லை, நீண்ட தொலைவு இருக்கிறது. இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைதி நிலவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள்
மற்றொரு வீடியோவில் நான்கு நிமிடங்கள் இந்தியில் பேசி இருக்கிறார். அதில், ''இந்திய பத்திரிக்கைகள் பரிதாப நிலையில் இருக்கின்றன. கண்காணிப்பாளராக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று அரசுக்கு மடிக்கணினியாக மாறி இருக்கின்றன என்று விமர்சனம் செய்து இருந்தார்.
தடை
ட்விட்டரிலும் இவருக்கு 5,300 ஃபாலோவர்கள் இருக்கின்றனர். ஆனால், இவரது அக்கவுண்ட் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இவரது ட்விட்டரில் சட்டத்திற்கு விரோதமான தகவல்கள் இருப்பதால் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ பலம்
குளோபல் டைம்ஸ்க்கு எழுதி இருந்த செய்தியில், ''இதுவரை இருதரப்புக்கும் இடையே நடந்து இருந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் வீணாகியுள்ளது. 1962க்குப் பின்னர் நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. இருவருக்கும் இழப்பு என்ற சூழல் உள்ளது. தங்களது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சண்டையிட்டு, ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றனர் என்று தெரிவித்து இருந்தார்.