தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன?
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறப்பிக்கப்படும் இயல்பான உத்தரவுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாட்டு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் அவ்வப்போது மாணவர்கள் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது.
இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பலர் முன்னின்று நடத்தி வருகிறார்கள். டெல்லியில்தான் இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் உச்சம் அடைந்துள்ளது. டெல்லியில் தினமும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
ஒரு பக்கம் ஷாகின் பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜேஎன்யூ கல்வி மையத்தில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். அவ்வப்போது ஜம்மா மசூதி பகுதியிலும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 19.01.2020 முதல் 18.04.2020 வரை யாரை வேண்டுமானாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செய்யலாம் என்று துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
இது இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி போராட்டங்களை முடக்க இப்படி செய்கிறார்களா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்பிக்கப்படும் இயல்பான உத்தரவுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எல்லா மாநில அரசும் போலீசுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்கும். டெல்லியில் போலீஸ் உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் அம்மாநில துணை நிலை ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.