மிரட்டும் கொரோனா.. கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் இருந்து டெல்லி வர புதிய கட்டுப்பாடு
டெல்லி: கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரும் 26 ம்தேதி தொடங்கி மார்ச் 15ம் தேதி இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
பேருந்து, ரயில், விமானம், கார் என எதில் வந்தாலும் கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இது இரண்டாவது அலை குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது.
ஆர்டி-பி.சி.ஆர்-சோதனை
இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும் கண்காணிப்பை கடுமையாக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆர்டி-பி.சி.ஆர்-சோதனையில் அதிக கவனம் செலுத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி அரசு
இதன் அடிப்படையில் தான், கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பரவல் கடுமையாக உள்ளதால் மற்ற மாநிலங்கள் இந்த மாநிலங்களில் இருந்து வருவோரை விழிப்புடன் கண்காணிக்க முடிவு செய்துள்ளன. டெல்லி அரசு மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இருந்து யார் டெல்லிக்கு வந்தாலும் ஆர்டி-பி.சி.ஆர்-சோதனை செய்து, முடிவு நெகட்டிவ் என்று இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கட்டாய கொரோனா பரிசோதனை
டெல்லி மட்டுமல்ல, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களும் மகாராஷ்டிராவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. கர்நாடகா மாநிலம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
குஜராத்
இதனிடையே கொரோனா கேஸ்களை கருத்தில் கொண்டு, திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் மத, சமூக மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
கர்நாடகாவில், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும் என்றும் சுகாதார அமைச்சர் கே.சுதக்கர் மக்களை எச்சரித்தார்.