டெல்லியில் வங்கிக் கொள்ளை - சினிமா பாணியில் அதிரடி காட்டிய 2 பேர் கைது
ஹாலிவுட் படத்தை பார்த்து விட்டு டெல்லியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: பணக்காரனாகவேண்டும் என்ற ஆசையில் சினிமா படத்தை பார்த்து விட்டு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரப்ஜோத் சிங், சுக்தேவ் சிங், இந்தர்ஜித் ஆகிய மூவரும் நண்பர்கள். மூவரும் வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். மூவரும் சேர்ந்து விடுமுறை நாளில் பேபி டிரைவர் என்ற படத்தைப் பார்த்தனர். அது ஒரு வங்கிக் கொள்ளை பற்றிய படமாகும். இதே போல நாமும் ஏன் வங்கியை கொள்ளையடித்து பணக்காரன் ஆகக் கூடாது என்று யோசித்தனர்.
அதற்காக ஸ்கெட்ச் போட்ட மூவரும் கெனாட் பிளேஸ் பகுதியில் இருந்த தனியார் வங்கியை தேர்வு செய்தனர். ஜூலை 2ஆம் தேதியன்று வங்கிக்குள் நுழைந்த மூவரும் வங்கி ஊழியர்களை பயமுறுத்துவதற்காக காற்றில் துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் அவர்களால் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. காவலாளியுடன் சண்டை போட்டு விட்டு தப்பி ஓடினர்.
இருப்பினும் விடுவார்களா நம் போலீஸ்படையினர்! தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வங்கி ஊழியரிடம் விசாரித்ததில் அவர்களின் புகைப்படம் சிசிடிவி கேமாராவில் சிக்கியது. அந்த சிசிடிவி கேமாரா சுமார் 2.5 கிமீ வரை உள்ள அனைத்து நடைபாதைகளையும் கண்காணிக்கும் வகையில் அமைந்தது கொள்ளையரை பிடிக்க போலீஸாருக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
சிசிடிவி கேமாராவின் உதவியின் மூலம் குற்றவாளிகளில் இருவரை பிடித்து விட்டனர். மூன்று பேரில் ஒருவன் எப்படியோ தப்பிவிட்டான். அவனையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இந்தர்ஜித் என்பவர்தான் வங்கி கொள்ளையின் போது கைத்துப்பாக்கியை கொண்டு வந்தவர், அவர் மட்டும் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த இரண்டு பேரை விசாரித்ததில் ஜவுளிக்கடையில் நஷ்டமடைந்த பிரப்ஜோத்சிங் ஹாலிவுட் படத்தை பார்த்த உத்வேகத்தில் வங்கியை கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீஸிடம் தெரிவித்தனர்.
வங்கியில் கொள்ளையடிக்க ஒரு வாரத்திற்கு முன்பே நோட்டமிடுவதற்காக பிரப்ஜோத் சிங் தனியார் வங்கிக்கு சென்று வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளார். அப்போது வங்கியின் பாதுகாப்பு குறித்தும் உள்ளே வரும் பாதை, வெளியே போகும் பாதை என வங்கியின் அனைத்து நடவடிக்கையையும் நோட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டுள்ளார். மற்ற இரண்டு பேரும் இந்த திட்டத்திற்கு உதவியாய் இருந்தவர்கள்.
சுக்தேவ்சிங் கணினி வேலையில் வல்லமை பெற்றவர், மேலும் இவர் மீரட்டில் பிஸ்சி என்ற திட்டத்தில் விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு காப்பீடு திட்டத்திலும் ஈடுபட அவர் ஒப்புக்கொண்டது தெரிய வந்தது தலைமறைவாக இருக்கும் இந்திரஜித் ஏசி பழுது பார்க்கும் பணியை செய்பவர் என்று போலீஸ் அதிகாரி கூறினார். இவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான இந்திரஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.