டெல்லி மாநகராட்சி தேர்தலில் சாதித்த ஆம்ஆத்மி! 15 ஆண்டு அதிகாரத்தை இழந்த பாஜக..பரிதாபத்தில் காங்கிரஸ்
டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 134 இடங்களில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி, டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த பாஜகவை விரட்டி உள்ளது. இந்த தேர்தலில் மிகவும் பரிதாபமான நிலையில் காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சியை 2007 முதல் தொடர்ந்து 3 தேர்தலில் பாஜக கைப்பற்றி வருகிறது. 2007 ல் ஒரு மாநகராட்சியாக டெல்லி இருந்தது. கடந்த 2012 தேர்தலில் டெல்லி மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்பட்டது.
டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சிகள் உருவாகின. இந்த 3 மாநகராட்சிகளும் 2012, 2017 ல் தேர்தல் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது.
டெல்லி மாநகராட்சியில் ஆம்ஆத்மி அமோக வெற்றி! பாஜக தோல்வி.. பலித்துபோன தேர்தல் கருத்து கணிப்பு!
டிசம்பர் 4ல் தேர்தல்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடந்தாலும் கூட மாநகராட்சி தேர்தலை பொறுத்தமட்டில் பாஜகவின் கையே ஓங்கி இருந்தது. தற்போது டெல்லி மாநகராட்சி மீண்டும் ஒன்றாக மாற்றப்பட்டது. 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு டிசம்பர் 4ல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மும்முனை போட்டி
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தற்போதைய தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி சார்பில் மொத்தம் 250 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
50 சதவீத ஓட்டுப்பதிவு
கடந்த 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களுக்காக 13,638 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அன்றைய தினம் காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5.30 மணி வரை நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 50 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின.
இன்று ஓட்டு எண்ணிக்கை
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று மொத்தம் 42 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று மதியம் முடிவுக்கு வந்தது.
இதில் டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றியது. அதிகாரத்தை கைப்பற்ற 126 வார்டுகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் மதியம் 2.30 மணி நிலவரப்படி ஆம்ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு அமோக வெற்றி பெற்றது. பாஜக 103 இடங்களில் மட்டுமே வென்று 2வது இடம் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பிற கட்சியினர் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
பலித்த கருத்து கணிப்புகள்
முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளன. அதன்படி ஜான்கி பாத் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் ஆம்ஆத்மி கட்சி 150 முதல் 175 இடங்களில் வெற்றி பெறும் எனவும், பாஜக 92 முதல் 72 இடங்களிலும் வாகை சூடும் எனவும், காங்கிரஸ் கட்சி 7 முதல் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என கணித்து கூறியது. டைம்ஸ் நவம்-நவ்பாரத் இடிஜி நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 84 முதல் 94 இடங்களிலும், ஆம்ஆத்மி 146 முத்ல 156 இடங்களிலும் காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறியது இந்நிலையில் தான் தற்போது கருத்து கணிப்புகள் ஆம்ஆத்மிக்கு சாதகமாக வந்தன. அதன்படியே தற்போதைய மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஆம்ஆத்மி அமோக வெற்றி
இதையடுத்து மதியம் 2 மணியளவில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. 250 வார்டுகளில் அதிகாரத்தை கைப்பற்ற 126 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சி 132 வார்டுகளில் முன்னிலை வகித்து, அதில் 127 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 வார்டுகளில் முன்னிலை வகித்த நிலையில் 100 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி மாநகராட்சி கடந்த 2007 முதல் பாஜகவின் பிடியில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பாஜகவை வீழ்த்தி டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஆண்டுக்கு பின் அதிகாரத்தை இழந்த பாஜக
டெல்லி மாநகராட்சியில் கடந்த 2007 முதல் பாஜக 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து வந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் ஆம்ஆத்மி பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் இந்த வெற்றி மூலம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் நிலையில் டெல்லி மாநகராட்சியும் ஆம்ஆத்மி கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்க உள்ளது.
காங்கிரஸ் பரிதாபம்
மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் செல்வக்கை இழந்து வருகிறது. இதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தற்போது ராகுல் காந்தி பாரத் ஜோடோ செல்லும் நிலையில் சமீபத்தில் மல்லிகார்ஜூன கார்கே புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் கூட டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஜொலிக்கவில்லை. வெறும் 10 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.