இதோ கயிறுடன் உட்கார்ந்திருக்காரே.. யாருன்னு தெரியுதா.. இவர்தான் ஜலாத்.. பரபரக்கும் திஹார் சிறை
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு அளிக்கப்படுகிறது
டெல்லி: இதோ கையில் கயிறுடன் உட்கார்ந்திருக்காரே யாருன்னு தெரியுதா.. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடப்போகும் ஹேங்மேன்தான் இவர்.. பெயர் ஜலாத்!!
எங்கெங்கோ முட்டி மோதி பார்த்தும் நிர்பயா குற்றவாளிகளால் எதுவுமே செய்ய முடியவில்லை.. தண்டனையை தடுத்து நிறுத்தவும், தாமதப்படுத்தவும் தங்கள் வக்கீலை வைத்து போராடி பார்த்தனர்.. எதுவும் வேலைக்காகவில்லை.
நாளை மறுநாள் 20-ம் தேதி இவர்களை தூக்கில் போட விசாரணை நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்தது. எனினும் சர்வதேச நீதிமன்றத்தை 4 பேரும் நாடியிருக்கிறார்கள்... இதனிடையே தண்டனையை நிறைவேற்றப்பட இன்னும் 2 நாள்தான் இருப்பதால், அதற்கான ஒத்திகை திகார் ஜெயிலில் நடத்தப்பட்டது..
ஹேங்மேன்
இவர்களை தூக்கில் போடும் ஹேங்மேன் பவன் ஜலாத் தூக்கிலிடும் பணிக்காக திகார் ஜெயிலுக்கு வந்திருந்தார்.. ஜலாத் மீரட்டில் வசிக்கிறார்.. இவர் ஒரு பெட்ஷீட் வியாபாரி. இவர் குடும்பத்தில் 4 தலைமுறையாகவே தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் என்ற போராட்ட வீரர்களை லாகூர் ஜெயிலில் தூக்கில் போட்டதும், இந்த பவான் ஜலாத்தின் தாத்தா தானாம்.
தூக்கு தண்டனை
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்றதும், ஜலாத்திடம் சிறை நிர்வாகம் கடந்த ஜனவரி மாதமே முறைப்படி தகவல் தெரிவித்து, சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பியிருந்ததாகவும் கூறப்பட்டது.. அப்போது ஜலாத் சொல்லும்போது, "ரொம்பவும் கீழ்த்தரமான வேலையை இந்த 4 பேரும் செய்திருக்கிறார்கள்.. மரண தண்டனையை நிறைவேற்றினால், அதன்மூலம் நிர்பயா குடும்பதினருக்கும், பொதுமக்களுக்கும் ஒரு ஆறுதலாவது கிடைக்கும்.. அதனால் இந்த பணியை நிறைவேற்ற நான் ரெடி" என்றார்.
ஒத்திகை
இப்போது தண்டனை உறுதியாகி இருப்பதால், குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான ஒத்திகை இன்று திகாரில் நடந்தது. அந்த தூக்கு கயிறு வலுவா இருக்கா? தூக்கு மேடை சரியா இருக்கா? என்பது போன்ற ரிகர்சல்கள் நடத்தப்பட்டன. அதேபோல, குற்றவாளிகளின் எடைகொண்ட 4 பொம்மைகள் மூலம் ஜலாத்தை வைத்து இந்த ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் நாளை மறுநாள் விடிகாலை இவர்கள் 4 பேரையும் தூக்கிலிடுவது உறுதி எனச் சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சட்ட நடவடிக்கை
சிறையில் உள்ள இந்த 4 பேருக்கும் தினமும் மெடிக்கல் செக்-அப் நடந்து வருகிறது.. மற்றொரு புறம் அவர்களுக்கு மனநல ஆலோசனையும் தரப்படுகிறது.. இதெல்லாம் இருந்தாலும் தூக்கு தண்டனையை எப்படி நிறுத்தலாம், எப்படி ஒத்தி வைக்கலாம் என 4 குற்றவாளிகளின் தரப்பில் ஏகப்பட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன!!