உங்கள் வேதனை புரிகிறது.. ஆனால் நாம் சட்டத்திற்குட்பட்டவர்கள்.. நிர்பயா தாய்க்கு நீதிபதி ஆறுதல்
டெல்லி: உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. ஆனால் நாம் சட்டத்திற்குட்பட்டவர்கள் என நிர்பயா பாலியல் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் குறித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்ற உத்தரவால் நீதிமன்றத்தில் கதறி அழுத தாய் ஆஷா தேவிக்கு நீதிபதி ஆறுதல் கூறினார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை சீராய்வு செய்ய கோரி அக்ஷய்குமார் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரி நிர்பயாவின் பெற்றோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
திகார் சிறை
அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில் இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை குற்றவாளிகள் கருணை மனுக்களை தாக்கல் செய்ய விரும்புகின்றனரா என அவர்களுக்கு நோட்டீஸ் வழங்குங்கள் என திகார் சிறை நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7-ஆம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
|
குற்றவாளிகளின் உரிமை
அப்போது நிர்பயாவின் தாய் நீதிமன்ற அறையில் கதறி அழுதார். அதை பார்த்த நீதிபதிகள், உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. இந்த 4 பேரின் செயலால் நிர்பயா இறந்துவிட்டார் என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் கருணை மனுக்கள் தாக்கல் என்பது குற்றவாளிகளின் உரிமையாகும்.
சட்டத்திற்குட்பட்டவர்கள்
உங்கள் வேதனையை, நியாயத்தை கேட்கத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். ஆனால் நாம் அனைவருமே சட்டத்திற்குட்பட்டவர்கள் என்றனர். இதுகுறித்து நிர்பயாவின் தாய் செய்தியாளர்களை சந்தித்தார்.
தூக்கு தண்டனை
அப்போது அவர் கூறுகையில் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் உரிமைகளை மட்டுமே நீதிமன்றம் பார்க்கிறது. எங்கள் பக்கம் இருக்கும் உரிமைகள், நியாயத்தை பார்க்கவில்லை. வழக்கு விசாரணைக்கு அடுத்த நாள் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு திகார் சிறைக்கு உத்தரவிடுவர் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என மிகவும் வேதனையுடன் தெரிவித்தார் ஆஷா தேவி.