அன்று காந்தியை சுட்ட துப்பாக்கி.. இன்று கண்ணில் பட்டவரையெல்லாம் சுடுகிறது.. ஷாக்கில் டெல்லி!
டெல்லி: அமெரிக்காவில்தான் சரமாரியாக துப்பாக்கியுடன் திரியும் காட்சிகளை அதிகம் நாம் பார்த்திருக்கோம். ஆனால் டெல்லியில் யாரைப் பார்த்தாலும் சரளமாக துப்பாக்கியை பிடித்து சுட ஆரம்பித்திருக்கிறார்கள். இதைத் தடுக்கத் தவறியதுதான் டெல்லி போலீஸ் செய்த மிகப் பெரிய தவறு!
Recommended Video
அமெரிக்கா போன்ற நாடுகளின் மோசமான துப்பாக்கிக் கலாச்சாரம் டெல்லியில் அதுவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வசம் உள்ள உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸாரின் கண்ணுக்கு நேராகவே சுதந்திரமாக உலா வருவது அதிர வைப்பதாக உள்ளது.
இது நம்ம டெல்லியா.. இந்தியாவின் தலைநகரா இது.. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நம்மை நாமே மார் தட்டிக் கொள்கிறோமே.. அந்த நாட்டின் இதயமா இப்படி என்று அனைவருமே அதிர்ந்து போய் நிற்கின்றனர். அன்று காந்தியைச் சுட்ட துப்பாக்கி இன்று கண்ணில் படுபவரை எல்லாம் சுட்டுக் கொண்டிருக்கிறது.
பல்கலை மாணவர்கள்
1948 ஜனவரி 30.. ஆம்.. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்தான் அது. அந்த நாளில் இன்னொரு அதிர்ச்சி சம்பவத்தை அதே டெல்லி பார்த்தது. ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தியபோது அங்கு தனி மனிதனாக கையில் துப்பாக்கியுடன் வெறியுடன் முன்னேறினான் ஒருவன். அவனுக்குப் பின்னால் அத்தனை போலீஸார். யாருமே எதுவுமே செய்யவில்லை. தடுக்கக் கூட முயலவில்லை.
துப்பாக்கி
துப்பாக்கியை நீட்டியபடி மிரட்டலாக பேசியபடி சென்ற அந்த இளைஞன் போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் பேசினான். பின்னர் பின்வாங்கிச் சென்றான்... அவன் வந்து மிரட்டி சாவகாசமாக திரும்பிப் போகும் வரை போலீஸ் அவனை தடுக்கவில்லை. ..இதுதான் டெல்லி காவல்துறை செய்த முதல் பெரும் தவறு... அதற்குப் பிறகு இதேபோல 2 , 3 துப்பாக்கி ஏந்திய நபர்கள் வந்து மிரட்டி, சுட்ட சம்பவங்களும் அரங்கேறின.
யார் சப்ளை செய்தது?
இதோ கடந்த 2 நாட்களாக நடந்து வரும் டெல்லி கலவரத்திலும் ஏகப்பட்ட இளைஞர்கள் கையில் துப்பாக்கி புழங்குகிறது... எப்படி இவர்களுக்கு துப்பாக்கி கிடைக்கிறது.. யார் சப்ளை செய்கிறார்கள்.. ஏன் இப்படி துப்பாக்கியுடன் வெறி பிடித்து அலைகிறார்கள் என்று யாருக்குமே புரியவில்லை... இவர்களைத் தடுக்கக் கூடவா டெல்லி போலீஸாரால் முடியவில்லை... அப்படி ஒரு பலவீனமான படையா நமது தலைநகரை காத்து நிற்கிறது.. ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது!!!
ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் என்பதை பயங்கரமான அச்சமூட்டும் சொல்லாக மாற்றி விட்டனர். உண்மையான இந்துக்கள் இதனால் மனம் நொந்து போய் உள்ளனர். ராமர் பெயரைச் சொல்லி அக்கிரமம் செய்கிறார்களே என்று அவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கிடக்கின்றனர்... வாஜ்பாய் போன்ற மாமேதைகள் கோலோச்சிய கட்சியின் பெயரால் நடைபெறும் ஆட்சியில் இதுபோல நடப்பது வாஜ்பாய்க்கும் சேர்த்துதானே கெட்ட பெயரைக் கொடுக்கும் என்று பலர் அங்கலாய்க்கிறார்கள்.
காவல்துறை
முதலில் இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை டெல்லி காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து ஒழிக்க வேண்டும். எவனைப் பார்த்தாலும் துப்பாக்கியுடன் திரிந்தால் எப்படி அது.. சின்னப் பசங்க கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக போவதைப் பார்க்கும்போது அந்த மகனைப் பெற்ற தாய் எப்படி துடித்துப் போயிருப்பாள்.. இதை ஏன் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்பதுதான் புரியவில்லை.
நாளை எதிர்காலம்?
டெல்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கி துப்பாக்கிகளுடன் திரிபவர்களை பிடித்து உள்ளே போட வேண்டும். கடுமையான சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்... யார் எவர் என்ற பாரபட்சமே இல்லாமல் நேர்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.... அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.. டிரம்ப் எதுவும் கேட்கலை, பேசாம போய்ட்டார்.. அப்பாடா நிம்மதி என்று அமைதியாக இருந்து விட்டால் நாளைய எதிர்காலம் நம்மை பார்த்து காரித் துப்பும்.. அதை மறந்து விடக் கூடாது!!