டெல்லி போலீசார் தொடர் அதிரடி... குடியரசு தின சம்பவம் தொடர்பாக இரண்டு பத்திரிகையாளர்கள் கைது!
டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மந்தீப் புனியா, தர்மேந்திர சிங் ஆகிய 2 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பத்திரிகையாளர்கள் பலர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.
வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக, மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்- ஸ்டாலின்
குடியரசு தின சம்பவத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மந்தீப் புனியா, தர்மேந்திர சிங் ஆகிய 2 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். தர்மேந்திர சிங் பின்னர் விடுவிக்கப்பட்டார், அதே நேரத்தில் மந்தீப் புனியா இரவில் கைது செய்யப்பட்டு இன்று காலை திகாரில் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி சம்பவத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான விவகாரத்தில் இவர்கள் தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. டெல்லி சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பத்திரிகையாளர்கள் பலர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 38 வழக்குகளை பதிவு செய்து 84 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.