டெல்லி வன்முறை- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா டெல்லி தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் கைது
டெல்லி: டெல்லி வன்முறைகள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் டெல்லி தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி ஷாகீன் பாக்கில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் வடகிழக்கு டெல்லியிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களால் அங்கு வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த வன்முறைகளில் 53 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிரான சி.ஏ.ஏ. போராட்டங்களுக்கு சில அமைப்புகள் நிதி உதவி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்துக்கு நிதி உதவி செய்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் ஆகியோர் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு வன்முறைகள் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டின் கீழ் டெல்லி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு எதிரான போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டனம்தெரிவித்துள்ளது.