டெல்லி நிஜாமுதீனில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை
டெல்லி: டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக அதிரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதி போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்பு அண்மையில் கூட்டம் ஒன்றை நடத்தியது. டெல்லியில் ஏற்கனவே மார்ச் மாதம் தொடக்கத்திலேயே ஒன்று கூடல்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மலேசியா, இந்தோனேசியா, செளதி அரேபியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் இதுபற்றி டெல்லி அதிகாரிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஶ்ரீநகரில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்; ஹைதராபாத்தில் 11 இந்தோனேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இப்படி அடுத்தடுத்து கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் பெரும்பாலும் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத்தான் என தெரியவந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து டெல்லி போலீஸ் அதிகாரிகள் நிஜாமுதீன் பகுதியில் முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது அங்கு தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். தற்போது இந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேடுதல் நடவடிக்கை
இதனிடையே தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேர்?
டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 23 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
கெஜ்ரிவால் உத்தரவு
இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் ஒன்று கூடல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.