குடியரசு தின டிராக்டர் பேரணி... செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை... தேச துரோக வழக்கு பாய்ந்தது
டெல்லி: குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது திடீரென்று செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தேச துரோக வழக்கு பாய்ந்தது.
கடந்த அக்டோபர் மாதம் பாஜக அரசு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இச்சட்டம் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
குடியரசு தின டிராக்டர் பேரணி
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்தன. நீண்ட தயக்கத்திற்குப் பின்னரே, டெல்லி போலீஸ் இந்த டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது.
செங்கோட்டையில் குழப்பம்
மேலும், டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட சிலர் செங்கோட்டையையும் முற்றுகையிட்டனர். அவர்கள் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான கொடியையும் ஏற்றினர். அதைத்தொடர்ந்து அங்கு டெல்லி போலீசுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற சிலருக்கும் வன்முறை ஏற்பட்டது. இந்த குழப்பத்தில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும், 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
தேச தூரோக வழக்கு
இந்நிலையில், செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் தேச துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, செங்கோட்டை வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் நடிகர் தீப் சித்து மற்றும் லகா சித்தனா ஆகியோரின் பெயர்களை டெல்லி காவல்துறை சேர்த்திருந்தது.
விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ்
இது தொடர்பாக இதுவரை 22 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வன்முறையைத் தொடர்ந்து தலைநகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகச் செங்கோட்டை வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் 20க்கும் மேற்பட்ட விவசாயச் சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.