டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி
டெல்லி: டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த அம்மாநில போலீஸ் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன.
உச்ச்சநீதிமன்றம் தற்போது விவசாய சட்டங்களை செயல்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர்கள் பேரணி நடத்துவோம் என போராடும் விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இந்த டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் இதனை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச், டெல்லி போலீஸ்தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என கூறியது.
இதனையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று டெல்லி போலீசாரை சந்தித்து பேசினர். அப்போது டெல்லியில் விவசாயிகள் அமைதியாக டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.