ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? எப்போது வன்முறை வெடித்தது? டெல்லி போலீஸ் விளக்கம்
Recommended Video
டெல்லி: ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தாவா இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக வெளியே மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். இதில் துணை போலீஸ் கமிஷனர், உதவி போலீஸ் கமிஷனர் ரேங்கில் உள்ளோர உட்பட சுமார் 30 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மதியம் 2 மணி அளவில் போராட்டம் தொடங்கிய நிலையில், 4.30 மணி அளவில் போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
போலீசார் முடிந்த அளவுக்கு அமைதியை கடைபிடித்து போராட்டத்தை கலைக்க முற்பட்டனர். நிலைமை கைமீறி போனதற்குப் பிறகு போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தான் தடியடி நடத்தப்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் தகவல் பொய்யானது. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
Delhi Police PRO, MS Randhawa: Yesterday around 2 pm protest happened, locals also participated, our staff showed maximum restraint despite provocations. Around 4:30 pm some protesters went towards Mata Mandir marg and set a bus on fire. pic.twitter.com/Pc66BtbB2w
— ANI (@ANI) December 16, 2019
போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு பேருந்துகள், 100 தனியார் வாகனங்கள் காவல்துறையினரின் 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. போராட்டக்காரர்கள் தங்கள் பேரணி பாதையை திடீரென மாற்றி வன்முறையில் இறங்கினர்.
வன்முறையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. ஜாமியா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதை யாருமே நம்ப வேண்டாம். குறிப்பாக மாணவர் சமூகத்தினர் இதை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.