டிராக்டர் பேரணியில் வன்முறை... 20 விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல் துறை
டெல்லி: குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 விவசாயச் சங்க தலைவர்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் விவசாயிகளின் நலனிற்கு எதிராகவுள்ளதாக குற்றஞ்சாட்டி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
டிராக்டர் பேரணி
விவசாய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியின்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும், 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
டெல்லி போலீஸ் நோட்டீஸ்
இந்நிலையில், குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 விவசாயச் சங்க தலைவர்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், பல்தேவ் சிங் சிர்சா மற்றும் பல்பீர் எஸ் ராஜேவால் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை கமிஷனர் கடிதம்
முன்னதாக, டிராக்டர் பேரணியின் போது ஒப்புக்கொண்ட உடன்படிக்கைகளை பின்பற்றாததாதல் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று துணை போலீஸ் கமிஷனர் சின்மாய் பிஸ்வால் விவசாய தலைவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். மேலும், ஜனவரி 25ஆம் தேதி போராட்டத்தின்போது, விவசாயிகள் தங்கள் டிராக்டர்களின முகப்புகளை மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் இதுவே அவர்களின் நிலைப்பாட்டை விளக்கின என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்து மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க தலைவர்களுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இருப்பினும், இதில் இரு தரப்பிற்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. மூன்று விவசாய சட்டங்களை 1.5 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், சட்டம் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.