வைரலான டெல்லி போலீசின் நீண்ட வாள், மெட்டல் லத்தி படங்கள்.. விசாரணைக்கு உத்தரவு!
டெல்லி: டெல்லி போலீசார் கைகளில் நீண்ட வாள், மெட்டல் லத்தியுடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானதால் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். ஜனவரி 26-ந் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணியில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன.
இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சில விவசாய சங்கங்கள், போராட்டத்தை கைவிட்டன. தற்போது டெல்லியின் காசிப்பூர், சிங்கு, திக்ரி எல்லைகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இப்போராட்டங்களில் விவசாயிகள் பெருந்திரளாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து வந்து பங்கேற்கின்றனர். இவர்களைத் தடுக்கும் வகையில் முள்வேலிகள், கான்கிரீட் தடுப்புகள் என டெல்லி போலீஸ் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில்தான் கைகளில் நீண்ட வாள், மெட்டல் லத்தியுடன் போலீசார் ஒரு கூட்டமாக இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
நாங்களும் தயார்...நீண்ட வாளுடன்...டெல்லி எல்லையில் குவிக்கப்பட்ட போலீஸ்
விவசாயிகள் போராட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் டெல்லி போலீசார் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது. இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து டெல்லி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
உயர் அதிகாரிகள் யாரும் இதுபோல் வாள், மெட்டல் லத்திகளை போலீசார் கையில் எடுக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தன்னிச்சையாகவே போலீசார் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.