சிறப்பு கமிஷ்னர் கொடுத்த வாக்கு.. கேட்டுக்கொண்ட போலீசார்.. போராட்டத்தை கைவிட இதுதான் காரணம்!
டெல்லியில் கடந்த 2ம் தேதி போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா உறுதி அளித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் கடந்த 2ம் தேதி போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா உறுதி அளித்துள்ளார். போலீசார் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நாளை டெல்லி ஹைகோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் டெல்லியில் போலீசார் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் போலீசார் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பார்க்கிங் பிரச்சனையில் போலீசாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்கினார்கள்.இதில் போலீசார் பலர் மோசமாக காயம் அடைந்தனர்.
இந்த பிரச்சனைக்கு எதிராக தற்போது டெல்லியில் போலீசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது.
தொடர் தாக்குதல்
2ம் தேதி தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பல இடங்களில் போலீசார் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பைக்கில் செல்லும் போலீசார்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கூட தாக்குதலுக்கு உள்ளார்கள். காக்கி சட்டையை பார்த்தாலே அடிப்போம் என்ற நிலைக்கு கருப்பு சட்டை சென்றதால் டெல்லியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
பெரிய போராட்டம்
இதனால் தற்போது டெல்லியில் போலீசார் போராட்டம் நடத்தி வந்தனர். காலையில் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான டெல்லி போலீசார் போராட்டம் நடத்தி வந்தனர். டெல்லி போலீஸ் ஆணையர், கூடுதல் ஆணையர், சிறப்பு ஆணையர் என்று மூன்று முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடியவில்லை.
பேச்சுவார்த்தை
டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா இன்று மாலை போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினா. அதில், காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அவர்களின் பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்படும்.
எல்லோரும் கவனம்
நம்மை எல்லோரும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறது. நாம் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். போலீஸ் -வழக்கறிஞர் சண்டை தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும்.
இழப்பீடு
வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும். வழக்கறிஞர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும். வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா உறுதி அளித்துள்ளார்.
கைவிட்டனர்
இந்த கோரிக்கையை போலீசார் ஏற்றுக்கொண்டார்கள். இதனால் டெல்லியில் போலீசார் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.