மெரினா ஸ்டைல் போராட்டம்.. டெல்லியில் களைகட்டிய போலீஸ் ஸ்டிரைக்.. நொடிக்கு நொடி பெருகிய ஆதரவு!
டெல்லி: டெல்லியில் போலீசார் நடத்திய போராட்டம் நாடு முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறது. மெரினா போராட்டம் போலவே பெரிய அளவில் இந்த போராட்டம் உருவெடுத்தது.
டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பார்க்கிங் பிரச்சனையில் போலீசாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்கினார்கள். இதில் போலீசார் பலர் மோசமாக காயம் அடைந்தனர். இந்த பிரச்சனையில் 20 போலீஸ் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது.
இதற்கு எதிராக டெல்லியில் போலீசார் போராட்டம் செய்து வருகிறார்கள். டெல்லியில் காலையில் இருந்து போராட்டம் நடந்து வருகிறது. பல மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் போலீசார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரிய வரவேற்பு
போலீசார்களின் இந்த போராட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. எப்போதும் போலீசாருடன் ஏட்டிக்கு போட்டியாக இருக்கும் மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குதித்து இருக்கிறார்கள்.
மக்கள் ஆதரவு
டெல்லி மக்கள் பலர் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். உயர் அதிகாரிகள் பலர் குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்கள் மனைவி, மகள், மகனை அழைத்து வந்து போராட்டம் செய்து வருகிறார்கள். போலீசார் எல்லோரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு இருப்பதால் இதை கட்டுப்படுத்த யாருமே இல்லை.
பெண் போலீசார்
அதேபோல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் பெண் போலீசார்கள் அதிக கவனம் ஈர்க்கிறார்கள். மெரினா போராட்டம் போலவே இவர்கள் நல்ல வாசகங்களை சொல்லி கொண்டாட்டமாக போராட்டம் செய்து வருகிறார்கள். பெண் போலீசார் பல போராட்ட குழுக்களுக்கு தலைமை தாங்கி வருகிறார்கள்.
மெரினா போராட்டம்
மேலும் ரேங்க் வித்தியாசம் இன்றி டிராபிக் போலீசார் பலர் போராட்டத்தில் முன்னிலையில் இருந்தனர். இந்திய போலீஸ் வரலாற்றில் இப்படி எல்லாம் நடந்ததே கிடையாது. இதுதான் முதல்முறை. மொத்தம் 11 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.