நீங்க செய்யறது ரொம்ப தப்பு... போலீசாரின் புதிய எச்சரிக்கை பலகை... டெல்லியில் திடீர் பரபரப்பு
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடைபெறும் திக்ரி போராட்ட களத்தில் விவசாயிகளை எச்சரிக்கும் வகையில் டெல்லி போலீசார் வைத்துள்ள புதிய பலகைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. இருப்பினும் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே எவ்வித உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை.
அதிலும் குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், போராட்டம் நடைபெறும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. நூற்றுக்காணகாகன போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகப் போராட்டம் நடைபெறும் இடங்கள் பதற்றமாகவே உள்ளன.
எச்சரிக்கை பலகை
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் திக்ரி போராட்ட களத்தில் விவசாயிகளை எச்சரிக்கும் வகையில் டெல்லி போலீசார் புதிய பலகைகளை வைத்துள்ளனர். அதில், "நீங்கள் இன்று ஒன்று கூடியிருப்பது சட்ட விரோதமானது. உடனடியாக கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
போலீசார் விளக்கம்
குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பின் இந்த பலகைகளை வைத்துள்ளதாகத் தெரிவித்த கூடுதல் டிசிபி சுதான்ஷு தமா, "நாங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் எதாவது அசம்பவாதம் நடைபெறும்போது, விவசாயிகள் மீண்டும் சட்டத்தை மீறும்போது, அது சட்டவிரோதமானது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த பலகைகளை வைத்துள்ளோம்" என்றார்.
போராட்டம் தொடரும்
இது குறித்து விவசாயச் சங்க துணை தலைவர் ஷிங்கரா சிங் மான் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைகளில் அவர்கள் இந்தப் பலகைகளை வைத்துள்ளனர். பல இடங்களில் இந்த பலகைகளை வைத்துள்ளனர். இருந்தாலும் இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக நரேந்திர சிங் தோமர் எங்களைப் பாராட்டியிருந்தார். ஆனால், இப்போது கூட்டமாக ஒன்றுகூடினால் மட்டும் சட்டத்தை ரத்து செய்ய மாட்டோம் என அவர் கூறுவது விநோதமாக உள்ளது" என்றார்.
அறுவடைக் காலம்
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள விவசாயச் சங்க தலைவர்கள் நாங்கள் டெல்லிக்குள் கூட செல்லவில்லை என்றும் எல்லையிலேயே போராட்டங்களை நடத்துவதாகவும் தெரிவித்தனர். எங்கள் போராட்டத்தைக் கலைக்க நினைத்தால் காசிப்பூரில் நடந்ததைப் போல போராட்ட களத்தை நோக்கி பொதுமக்களும் வருவார்கள் என்றும் அவர்கள் கூறினர். வரும் ஆறுவடை காலத்தில் போராட்டமும் நடைபெறும் அறுவடையும் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.