டெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பணியிலும் வாட்டும் கடும் குளிரிலும் விவசாயிகள் இன்று 9-வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிரானது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. அதனால் அதனை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு, விவசாய சங்க பிரநிதிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டெல்லியில் நேற்று 30 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 7 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே மேலும் பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.